ரெட்டி சகோதர்கள் சுரங்கத்தை தேசியமயமாக்க சிஐடியு கோரிக்கை
டெல்லி: சட்டங்களையும், விதிகளையும் ஏற்க மறுக்கும் ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான சுரங்கங்களைத் தேசிய மயமாக்க வேண்டும் என்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
கர்நாடகாவில் சட்ட விரோதமாகச் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதியால் கர்நாடகா அரசியலில் அமைதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை கர்நாடகா வோடு முடிந்துவிடக் கூடியது அல்ல. ஆந்திரா, ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் கோவா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் உள்ளது. இதனால் அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்படுகிறது.
நாட்டில், பல மோசடிக் கும்பல் மாநில அரசுகளிலும், அரசியல் கட்சிகளிலும் ஊடுருவி ஜனநாயக வழி முறைகளைச் சீரழிக்கின்றன. மேலும் பொது நிர்வாகம் மற்றும் சட்ட அமைப்புகளையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.
இத்தகைய சக்திகளை மாநில அளவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்காணிக்க இயலாது. எனவே, இதை தேசியப் பிரச்சனையாகக் கருதி தேசிய அளவில் தீர்வு காண வேண்டும். எனவே, இரும்புத் தாது ஏற்றுமதிக்குத் மத்திய அரசு உடனே தடை விதிக்க வேண்டும்.
அனைத்து சட்டங்களையும், விதிகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் ரெட்டி சகோதரர்கள் போன்றவர்கள் நடத்தும் சுரங்கங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.