இந்திய விமானப் படைக்கு மேலும் 57 ஹாக் போர் பயிற்சி விமானங்கள்

நேற்று பெங்களூர் வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன்படி ஹாக் விமானங்களை இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் நிறுவனம் (BAE Systems) வழங்கும், அதற்கான என்ஜின்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தரும்.
முன்னதாக 2004ம் ஆண்டு பிஏஇயிடம் இருந்து 66 ஹாக் போர் பயிற்சி விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்ததின் மதிப்பு ரூ. 14,5000 கோடி.
அதில் 24 விமானங்களை பிஏஇ முழுமையாக தயாரித்துத் தர வேண்டும் என்றும், மிச்சமுள்ள 42 விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிஸ் நிறுவனமே கட்டுவது என்றும், அதற்கான தொழில்நுட்பத்தையும் கருவிகளையும் இங்கிலாந்து வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், போதிய கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் வழங்காமல் பிஏஇ இழுத்தடித்தது. இதனால் அந்த விமானங்களை இந்தியாவி்ல் உருவாக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த இழுத்தடிப்புகளால் இதுவரை வெறும் 15 விமானங்களையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
இதனால் இங்கிலாந்திடமிருந்து இனியும் போர் பயிற்சி விமானங்களை வாங்குவதில்லை என்ற முடிவுக்கு இந்தியா வந்தது.
இதையடுத்து வேறு நாடுகளிடமிருந்து போர் பயிற்சி விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்த நிலையில், இங்கிலாந்து அரசு தலையிட்டு மத்திய அரசிடம் பேசியது.
பிஏஇ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து பிரச்சனைகளைத் தீர்த்தனர். இதையடுத்து இங்கிலாந்திடமிருந்து மேலும் 57 விமானங்கள் வாங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களை இங்கிலாந்து தரும், விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கும்.
இப்போது இந்தியாவிடம் கிரன் ரக போர் பயிற்சி விமானங்களே உள்ளன. இந்த விமானங்களில் பயிற்சி முடித்துவிட்டு அதி நவீன போர் விமானங்களை இயக்குவதில் விமானிகளுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து நவீனமான போர் பயி்ற்சி விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்க ரஷ்யா, செக், இங்கிலாந்து உள்பட பல நாடுகள் போட்டியிட்டன. இறுதியில் இங்கிலாந்தின் ஹாக் விமானங்களை வாங்குவதென முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications