சென்னை சிறுவன் படுகொலை-பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை சிறுவன் ஆதித்யா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்காதலில் தோல்வி அடைந்ததால், அதிருப்தி அடைந்த இளம் பெண் பூவரசி, தனது கள்ளக்காதலர் ஜெயக்குமாரின் ஒன்றரை வயதுக் குழந்தை ஆதித்யாவை கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து புதுச்சேரிக்கு கொண்டு சென்று அங்கு பஸ்சில் போட்டு விட்டு வந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவுடன் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் அவர் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அங்கு மனு தள்ளுபடியாகி விட்டது. இதையடுத்து சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் பூவரசி.
அந்த மனு நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பூவரசி சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதாடும்போது, பூவரசி மீது தேவை இல்லாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்வதாக கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்தார். இன்றைக்குள் அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அரசுத் தரப்பி்ல இன்று வாதிடுகையில், இன்னும் விசாரணை முடியவில்லை. எனவே பூவரசிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பூவரசியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications