கொல்லம் அருகே ரூ.2 கோடி போதை பொருளுடன் 4 பேர் கைது
கொல்லம்: கொல்லம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டை பகுதியில் போதை பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கருணாகப்பள்ளி இன்ஸ்பெக்டர் கோபகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோபகுமார் தலைமையில் போலீசார் சாஸ்தான் கோட்டை பகுதியில் உள்ள லாட்ஜ்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதை பொருட்களுடன் கும்பல் ஒன்று தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த லாட்ஜில் மாறுவேடத்தில் சென்ற இன்ஸ்பெக்டர் கோபகுமார் போதை பொருள் கேட்டுள்ளார்.
அந்த கும்பல் அருகில் உள்ள பூங்காவிற்கு மாலையில் வருமாறு கூறியுள்ளது. எனவே, மாலையில் இன்ஸ்பெக்டர் கோபகுமார் தலைமையில் சென்ற போலீசார் அங்கு போதை பொருளுடன் காத்திருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ ஆம்பிட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில், பிடிபட்டவர்கள் பரவூர் பகுதியை சேர்ந்த சுஜிர், அவரது தம்பி ஷியாத், நியாஸ் என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரையை சேர்ந்த சேகர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications