திருப்பூரில் விபத்து ஏற்படுத்திய மு.க. ஸ்டாலின் வரவேற்பு பேனர்
திருப்பூர்: திருப்பூரில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக திமுகவினர் கட்டியிருந்த இரும்பு வரவேற்பு வளைவில் மோதியதில் இரண்டு சக்கர வானத்தில் சென்ற ஒருவரது கால் முறிந்தது.
திருப்பூர் அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (51). இவர் அவிநாசி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
திருப்பூரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பல்வேறு இடங்களில் திமுகவினர் இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட வரவேற்பு வளைவுகளை வைத்திருந்தனர்.
அப்போது, ராம் நகர் சந்திப்பு ஒரு வழிப் பாதை அருகில் வைக்கப்பட்ட இரும்பு கம்பி வளைவில் திமுக-வின் கருப்பு, சிவப்பு துணி முழுமையாக மூடப்படாமல் கீழ்பகுதி வெற்றிடமாக விடப்பட்டிருந்தது.
இதனால், சாலையில் செல்வோருக்கு அங்கு இரும்புக் கம்பி இருப்பது தெரியவில்லை. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சண்முகம் அந்த கம்பியில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் எலும்பு முறிந்தது.
இதனையடுத்து சிகிசைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.