வேலை நிறுத்தத்தை கைவிட லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் கமல் நாத் வேண்டுகோள்
டெல்லி: நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் லாரி உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று லாரி உரிமையாளர்கள் சுங்க வரிக் கொள்கையை எதிர்த்து கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று கமல்நாத் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சுங்க வரியை குறைக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் சுமார் 62 லடசம் லாரிகள் கால வரையின்றி ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கமும், அனைத்து இந்திய மோட்டார் காங்கிரசும் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து கமல்நாத் கூறுகையில், நாங்கள் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று கூட பேசினோம். மக்களை பாதிக்கும் அந்த முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம் என்றார்.