தெலுங்கானா இடை தேர்தல்கள்-டிஆர்எஸ் மாபெரும் வெற்றி
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் 12 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 11 இடங்களில் பெறும் வெற்றி பெற்றுள்ளது.
மிச்சமுள்ள ஒரு இடத்தை பாஜக பிடித்துள்ளது. ஆளும் காங்கிரசும், தெலுங்கு தேசமும் படுதோல்வி அடைந்துள்ளன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி 10 தொகுதிகளில் எம்எல்ஏக்களாக இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினரும் ஒரு பாஜக எம்எல்ஏவும் ஒரு தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் கடந்த 26ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தெலுங்கானா பகுதியில் 5 மாவட்டங்களில் உள்ள இந்த 12 தொகுதிகளிலும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலுங்கு தேசம், ஆளும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
இதையொட்டி மகாராஷ்டிரத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அந்த மாநிலத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்து கைதானார். ஆனால், அவரது இந்த தேர்தல் நேரத்து நாடகம் பலனிக்கவில்லை. இந்த இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி முன்னணியில் இல்லை. அவரது கட்சி எம்எல்ஏ ராஜினாமா செய்த தொகுதியிலும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியே முன்னிலையில் உள்ளது.
பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிஜாமாபாத் தொகுதியில் அந்தக் கட்சியே முன்னிலையில் உள்ளது.