தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
புதிய மின் கட்டண விகிதத்தை இன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் தெரிவித்தார்.
30 பைசா முதல் ரூ. 1.10 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில மின்சார வாரியத்திற்கு கூடுதலாக ரூ. 1651 கோடி வருவாய் கிடைக்கும்.
இருப்பினும் மாதம் 300 யூனிட்டுக்கும் கீழே மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர், குடிசைவாசிகள், கைத்தறிக் கூடங்கள், மின்தறிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விவசாய நுகர்வோர் ஆகியோருக்கு உயர்வு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், வீடுகளில் மாதத்திற்கு 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 1 அதிகரித்து ரூ. 5.75 வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 4.40 ல் இருந்து ரூ. 4.80 அதிகரிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களுக்கு யூனிட்டுக்கு ரூ4.40ல் இருந்து ரூ.5.50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடிசை மற்றும் சிறு ரக தொழிற்சாலைகளுக்கு 1800 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும், அதற்கு மேல் செல்லும் பட்சத்தில் யூனிட்டுக்கு ரூ. 3.80 ம் விகிதத்திலும் மின்கட்டணம் வசூலிக்கப்படும்.
ஷாப்பிங் காம்ப்ளக்சுகளுக்கும் 1800 யூனிட்டுகளுக்கு மேல் செல்லும் போது ரூ. 5.00 வசூலிக்கப்படும்.
முதல் முறையாக 50 யூனிட்டுக்கும் கீழே பயன்படுத்தும் பெட்டிக்கடைக்காரர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 1 குறைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 2.32 கோடி மின்சார நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களில் 2.15 கோடி பேருக்கு மின் கட்டண உயர்வால் பாதிப்பு இருக்காது.
சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில் கடைசியாக 2003ம் ஆண்டு மார்ச் 16ம் தேதிதான் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றார் கபிலன்.