துணை முதல்வர் வருகையால் போலீசாருக்கு விடுமுறை 'கட்'
தூத்துக்குடி: தூத்துக்குடியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் விடுமுறை எடுக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ம் தேதி புதிய மாநகராட்சி அலுவலகம், புதிய சமத்துவபுரம் ஆகியவற்றை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்று நடக்கும் விழாவி்ல் அவர் ரூ.170 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் அன்றைய தினத்தில் உலக புகழ்பெற்ற பனியமாதா ஆலய தேர்பவனி நடக்கிறது. இதனால் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதற்காக நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை தேவைப்பட்டால் விழாவுக்கு பின் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள டி.எஸ்.பி. அலுவலகங்கள் மூலம் இந்த தகவல் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.