ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
சென்னை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பெயரில் போலியான இமெயில்கள் உலா வருகின்றன. இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நலமா? உலகில் இயற்கை சீற்றம் உள்பட பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்சபை கடந்த 8 மாதமாக ஆலோசனை நடத்தி வந்தது. 2 நாட்களுக்கு முன்பு இதுபற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம் போன்ற விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4 கோடிக்கு மேல்) நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளது. இதற்காக நைஜீரியாவில் உள்ள உலக வங்கி தலைவர் ரெவ்.டேல் ராபீன்சன் என்பவரை உடனே தொடர்பு கொள்ளவும்.
அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அவருக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நிவாரண தொகை உடனே வழங்கப்படும். உலகில் உள்ள எந்த வங்கியிலும் இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி ஒரு இமெயில் உலா வரத் தொடங்கியுள்ளது. பான் கி மூன் அனுப்பியது போல இந்த மெயில் உள்ளது. ஆனால் இது போலி மெயில் என காவல்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம். இதுபோல் யாராவது மோசடி செய்ய முயற்சித்தால் புகார் கொடுக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications