ஜெ மீதான ரூ. 2 கோடி பரிசு வழக்கு: ஒத்திவைக்க சிபிஐ எதிர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1992ல் முதல்வராக இருந்த போது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடிக்கு காசோலை பரிசாக வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று தனக்குத் தெரியாது என்று கூறிய ஜெயலலிதா அதை தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு பணமாக்கிக் கொண்டார்.
அரசுப் பதவியில் இருப்பவர் தனக்கு வரும் பரிசை சொந்த வங்கிக் கணக்கில் சேர்ப்பது குற்றம் என்று கூறி சிபிஐ அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு உடந்தையாக இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, செங்கோட்டையன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
சிபிஐ நீதிமன்றத்தி்ல் நடந்து வரும் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருவதால் எங்களது மூத்த வக்கீல் அங்கு செல்ல வேண்டியிருக்கிறது.
எனவே வழக்கு விசாரணையை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே இப்படி அவகாசம் கேட்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது என்றார்.
இதை கேட்ட நீதிபதி ரவீந்திரன், நீங்கள் கூறியதை பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று சிபிஐ வக்கீலிடம் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலிலும் தொடர்ந்து நடக்கிறது.












Click it and Unblock the Notifications