லாரிகள் வேலைநிறுத்தம் ஆகஸ்ட் 10 வரை ஒத்திவைப்பு
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக்கை நிறுத்தி வைக்குமாறு தென் மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளோம்.
இன்னும் பத்து நாட்களில் சாலை வரியை முறைப்படுத்துவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. அதை நம்பி ஆகஸ்ட் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என்றார்.