அதிமுக-காங் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: ஏ.பி. பரதன்
சிவகங்கையில் நடந்த அக் கட்சியின் 2 நாள் மாநிலக் குழுக் கூட்டத்தையொட்டி நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விலைவாசி உயர்வுப் பிரச்சனையில் காங்கிரஸ் தொழிற்சங்கம் உளளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் முதன்முறையாக செப்டம்பர் 7 முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இதை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. இந்தப் போராட்டம் வெற்றிபெற நாங்கள் துணையாக இருப்போம்.
தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பாக மாநிலக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்கள் விரோதப் பொருளாதாரத் திட்டங்கள் காரணமாக காங்கிரசுடனும் அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளோடும், மதவாத சக்தியாக விளங்கும் பாஐகவின் கூட்டணிக் கட்சிகளோடும் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் கால அவசாகம் இருப்பதால், யாருடன் கூட்டணி என்பதை இப்போதே முடிவு செய்யவில்லை.
கூட்டணிக்காக அதிமுகவும் காங்கிரசும் நெருங்கி வருவதாகச் சொல்லப்படுவதை நாங்கள் நம்பவில்லை. கூடுதல் இடங்களைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் 3 குதிரைகள் மீது சவாரி செய்ய முயற்சிக்கிறது.
காஷ்மீரில் பொதுமக்களே நேரடியாகப் பாதுகாப்பு வீரர்கள் மீது கல்லெறியும் காட்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அங்கு துப்பாக்கியால் சுடுவதை நிறுத்திவிட்டு, அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும். காஷ்மீருக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
காமன்வெல்த் போட்டிக்கு அதிகம் செலவு செய்திருப்பது போல் பெரிய அளவுக்கு ஊழலும் நடந்திருக்கிறது. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது.
நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் காமன்வெல்த் போட்டிகள் நடத்தும் அதே வேளையில், அதில் உள்ள ஊழல்கள் தொடர்பாக முழு அளவிலான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்றார் பரதன்.