சென்னையில் சிலை திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேர் கைது: ரூ.10 லட்சம் சிலைகள் மீட்பு
சென்னை: சென்னையில் சிலைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புடைய சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் சிலைகளை திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி. ராஜேந்திரன் உத்தரவின்படி சூப்பிரண்டு ராதிகா, துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்புப்படை போலீசார் எழும்பூர் ரயில் நிலைய பகுதியில் மாறு வேடத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிலைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த மருதபாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிக்கினர். மருதபாண்டி வத்தலகுண்டை சேர்ந்தவர். ரவிச்சந்திரன் வாடிப்பட்டி அருகே உள்ள ராமேஸ்புரம் தோட்டத்தை சேர்ந்தவர். இவர்களிடமிருந்து 1 அடி உயர அம்மன் சிலையும், 1 1/2 அடி உயர பெருமாள் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சிலைகள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருடப்பட்டதாகவும், மேலும், அவற்றை சென்னைக்கு சென்று விற்று வரும்படி பழனிச்சாமி என்பவர் கொடுத்ததனுப்பியதாகவும் மருதுபாண்டி போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து ராமகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை அடி உயர புத்தர் சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. ராமகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர். புத்தர் சிலை நெல்லை மாவட்ட பகுதியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மருதபாண்டி, ரவிச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகளை கொடுத்த பழனிச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இந்த சிலைகள் எல்லாம் எங்கிருந்து திருடப்பட்டவை என்பது தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 3 சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.