அண்ணா பிறந்தநாள்-காஞ்சிபுரத்தில் மதிமுக திறந்தவெளி மாநாடு
சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணா பிறந்தநாள் விழாவை, ஓங்குபுகழ் உன்னத விழாவாகக் கொண்டாடி வருகின்ற மதிமுக, இந்த ஆண்டு செப்டம்பர் 15ல், அறிஞர் அண்ணா கண் மலர்ந்த காஞ்சிபுரம் திருநகரில், பெருஞ்சிறப்புடன் திறந்தவெளி மாநாடாகக் கொண்டாட இருக்கிறது.
1998ம் ஆண்டு, செப்டம்பர் 15ல், அண்ணா பிறந்தநாள் விழாவை, திராவிட இயக்க வரலாற்றிலேயே, அழியாப்புகழ் பெற்று, தனி முத்திரை பதித்த விழாவாக, தலைநகர் சென்னை மெரீனா கடற்கரையில், மறுமலர்ச்சிப் பேரணியும் நடத்திக் கொண்டாடியது.
அன்றைக்கு இந்திய நாட்டின் தலைமை அமைச்சர், உள்துறை அமைச்சர், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் பங்கு ஏற்ற பெருவிழாவாக நடத்தி, அறிஞர் அண்ணாவின் பெருமையை-புகழை, அனைத்து இந்தியாவுக்கும், அகிலத்துக்கும் உயர்த்திக் காட்டியது.
2008ம் ஆண்டு, அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை, மதுரை மாநகரில் மாநாடாக நடத்தி, அதன் நிறைவு விழாவை, 2009 செப்டம்பர் 15ல், திருச்சி மாநகரில் நடத்தியது.
நடப்பு ஆண்டில், அண்ணா பிறந்த காஞ்சியிலேயே திறந்த வெளி மாநாடாக, மதிமுக கொண்டாடும். என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications