அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
அரியலூர்: அரியலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம், 120 பவுன் தங்க நகைகள் கருகின. தன் செல்வமெல்லாம் எரிவதை பார்த்த நிதி நிறுவன அதிபர் மயங்கி விழுந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி. இவரின் குடிசை நேற்று காலை 9 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்து வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நிதி நிறுவன அதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான சிவசாமி என்பவரின் வீட்டுக்கும் தீ பரவியது. அவரது வீட்டில் இருந்த ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம், 120 பவுன் தங்க நகைகள் ஆகியவை தீக்கிரையானது.
தான் அரும்பாடு பட்டு சம்பாதித்த பணம்-நகை எரிவதை பார்த்த சிவசாமி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications