லாரி மோதி குற்றாலம் வி.ஏ.ஓ. அலுவலகம் சேதம்
தென்காசி: குற்றாலத்தில் காற்றாலை தூண் ஏற்றி வந்த டிரைலர் லாரி மோதி வி.ஏ.ஓ. அலுவலக சுவர் சேதம் அடைந்தது.
தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று புற பகுதிகளில் காற்றாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. காற்றாலைக்கு தேவையான ராட்சத தூண்கள், இறக்கைகள், ஜெனரேட்டர்கள் போன்றவை பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிரைலர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
குற்றால சீசனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பகல் நேரங்களில் டிரைலர் லாரிகளை போலீசார் அனுமதிப்பது இல்லை. இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்கின்றனர். நேற்று அச்சன்புதூர் பகுதிக்கு தடையை மீறி காற்றாலை தூண் ஏற்றி வந்த ராட்சத டிரைலர் லாரி குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தின் சுற்று சுவர் அருகே உள்ள மரத்தில் உரசியது. இதில் சுற்று சுவர் சேதம் அடைந்தது. இதனையடுத்து லாரியை போலீசார் அண்ணா சிலை அருகே நிறுத்தி வைத்தனர்.