தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடுவதில் இந்தியாவிலேயே அழகிரி முதலிடம்
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவதில் மதுரை தொகுதி உறுப்பினரும், மத்திய ரசாயணத்துறை அமைச்சருமான மு.க.அழகிரி முதலிடத்தில் உள்ளார்.
மாநில அளவில் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிதியை மாநில அரசுகள் வழங்குகின்றன. இதேபோல தேசிய அளவில் எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியை ஒவ்வொரு எம்.பிக்கும் மத்திய அரசு ஒதுக்குகிறது. ஒவ்வொரு எம்.பிக்கும் ஆண்டுக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதை பலர் தங்களது தொகுதி பணிகளுக்காக ஒதுக்கி செலவிடுகின்றனர். சிலரோ இதை தொட்டுக் கூட பார்ப்பதில்லை.
இந்தத் தொகுதி நிதி மூலம் ஒவ்வொரு எம்.பிக்கும் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின்போது ரூ. 10 கோடி கிடைக்கும். இதை வைத்து பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
ஆனால் இதை செலவிடக் கூட நேரம் இல்லாமல் பல எம்.பிக்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 545 எம்.பி.க்களில் 130 எம்.பி.க்கள் 2 கோடி ரூபாயிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கவில்லையாம்.
ஆனால் இதை செலவிடுவதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார் அழகிரி. மதுரை தொகுதி எம்.பியான அழகிரி, கடந்த 14 மாதங்களில் மொத்தம் உள்ள ரூ.2 கோடியில் ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் அதிக நலத்திட்ட உதவிகளை பெற்ற தொகுதியாக மதுரை மாறியுள்ளது.
அழகிரிக்கு அடுத்தப்படியாக சபாநாயகர் மீராகுமார் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாயை தன் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ரூ.1 கோடியே 9 லட்சமும் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும் செலவிட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ரூ.2 கோடி பணத்தில் 97 லட்சம் ரூபாயை தன் தொகுதி மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளார். மற்ற எம்.பி.க்கள் சில லட்சம் பணத்தையே தங்கள் தொகுதி மக்களுக்காக செலவிட்டுள்ளனர்.
அதாவது அழகிரி, ப.சிதம்பரத்தைத் தவிர தமிழகத்தைச் சேர்ந்த பிற எம்.பிக்கள் இந்த நிதியை சரிவர பயன்படுத்தவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.
ஒரு பைசா கூட செலவழிக்காத சோனியா-அத்வானி
ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாதிக்கு பாதி எம்.பி.க்கள் ஒரு பைசா கூட எடுத்து செலவழிக்க வில்லை. அவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் அத்வானி, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவும் அடங்குவார்கள்.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஊரக மேம்பாட்டு அமைச்சர் ஜோதி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ், குமாரசாமி ஆகியோரும் ரூ.2 கோடியில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து தொகுதி மேம்பாட்டுக்காக கொடுக்கவில்லை.
அரசாங்கமே வலியக்க வந்து பணத்தைக் கொடுத்தும், அதை கூட தொகுதி மக்களுக்காக செலவிட மனம் வராத இவர்களெல்லாம்... என்னத்தைச் சொல்வது...!
வதந்திகளை நம்பாதீர்-அழகிரி:
இதற்கிடையே அழகிரி வெளியிட்டுள்ள அறி்க்கையில், ஒரு சில வாரப்பத்திரிகைகளில் தொடர்ந்து இட்டுக்கட்டி நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கற்பனைகளை ஜோடித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடுநிலைப் பத்திரிகைகள் என்ற பெயரில் தென் மாவட்டத்தை சேர்ந்த கழக பொறுப்பா
ளர்கள் மற்றும் முன்னணியினரை அவதூறாகவும், அடிப்படை ஆதராங்களும் இல்லாத விஷமத்தனமான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வாடிக்கையாகிவிட்டது.
அவ்வாறு அவதூறு பரப்பிய வாரப்பத்திரிகைகள் மீது சட்டரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இதுபோன்ற அவதூறான வதந்திகளை பரப்பும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
மக்களவையில் அழகிரியின் முதல் பதில்:
இதற்கிடையே இன்று மக்களவையி்ல் சர்வதேச தரத்திற்கு இணையாக இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் உறுப்பினர் சரன் தாஸ் மஹந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலிளித்த அழகிரி, ஏ முதல் ஈ வரையிலான அறிக்கை அவையில் தாக்கல் அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
அந்த அறிக்கையில், உள்நாட்டில் சர்வதேசத் தரத்தில் மருந்துகள் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகமதாபாத் மற்றும் மொஹாலி ஆகிய 2 இடங்களில் மிகச் சிறந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நலிவடைந்ததன் காரணத்தால் மூடப்பட்டுள்ள 5 உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்க கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அழகிரியின் அனுமதி பெற்று இணையமைச்சர் ஸ்ரீகண்ட ஜேனா பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications