கலைஞர் வீட்டு வசதி திட்டம்: 'இது என்ன நியாயம்?'- இளங்கோவன் சாடல்
ஈரோட்டில், மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது.
குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, வெறும் 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்'' என பெயர் வைத்துள்ளனர். இது என்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது.
அதே போன்று, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், ரூ 70 முதல் ரூ 80 மட்டும் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை தைரியமாக செய்து வருகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பிக்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் கட்சி தான் தியாகி.
எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ வீட்டை இடித்து சீல் வைக்கின்றனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லை. குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது?.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா?.
தமிழகத்தில் மைனாரிட்டி எனப்படும் சிறுபான்மை அரசுதான் நடைபெறுகிறது. அதுவும் காங்கிரஸின் தயவில்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை திமுக மறந்துவிடக்கூடாது என்றார்.