துவரம் பருப்பு-சர்க்கரை விலை திடீர் சரிவு... பாமாயில் விலை உயர்வு!
மராட்டிய மாநிலத்தில் இருந்து புது துவரம் பருப்பு வரத்து ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் பர்மா, சீனா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் பருப்பு வகைகள் இறக்குமதியாக உள்ளன.
இதனால் பருப்பு வகைகள் மூட்டைக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை குறையும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். எனவே வியாபாரிகள் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் குடோன்களில் இருப்பு வைத்திருந்த பருப்பு மூட்டைகளை வெளிமார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனால் கடந்த மாதம் முதல் ரக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையானது, ரூ.65 ஆகவும், இரண்டாம் ரக துவரம்பருப்பு கிலோ ரூ.66-க்கு விற்பனையானது, ரூ.58 ஆகவும் குறைந்துள்ளது. கடந்த மாதம் முதல் ரக உளுத்தம் பருப்பு கிலோ ரூ.83-க்கு விற்பனையானது, ரூ.77 ஆகவும், இரண்டாம் ரக பர்மா உளுத்தம் பருப்பு கிலோ ரூ.78-க்கு விற்பனையானது, ரூ.71 ஆகவும், பாசி பருப்பு முதல் ரகம் கடந்த மாதம் கிலோ ரூ.92-க்கு விற்பனையானது, ரூ.82 ஆகவும், இரண்டாம் ரக பாசி பருப்பு கிலோ ரூ.85-க்கு விற்பனையானது, ரூ.75 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாமாயில் விலை உயர்வு:
அதேநேரம் சர்வதேச சந்தையில் எண்ணை வகைகளின் விலை உயர்ந்ததால் பாமாயில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் ரூ.40-க்கு விற்பனையானது, இப்போது ரூ.45 ஆகவும், சன்பிளவர் ஆயில் ஒரு லிட்டர் பாக்கெட் முதல் ரகம் ரூ.57-க்கு விற்பனையானது, ரூ.62 ஆகவும், இரண்டாவது ரக சன்பிளவர் ஆயில் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.50-க்கு விற்பனையானது, ரூ.56 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடலை எண்ணெய் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.82-லிருந்து ரூ.88 ஆகவும், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.75-லிருந்து, ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாவதால் இந்தியாவில் பூண்டு விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
கடந்த மாதம் முதல் ரக பூண்டு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது, ரூ.120 ஆகவும், இரண்டாம் ரக பூண்டு கிலோ ரூ.70-க்கு விற்பனையானது, ரூ.90 ஆகவும், மலைப்பூண்டு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது, ரூ.180 ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்று அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பிராணாவன் கூறினார்.
சர்க்கரை விலை வீழ்ச்சி:
கடந்த மாதம் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மில்களுக்கும் 12 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு மக்களின் தேவையை கருதி 17 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் வடமாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்துள்ளதால் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது.
எனவே உயர்ந்து வந்த சர்க்கரை மூட்டைக்கு ரூ.100 வரை குறைந்துள்ளது. விலை உயரும் என்று எதிர்பார்த்து ஏராளமான வியாபாரிகள் சர்க்கரை மூட்டைகளை இருப்பு வைத்திருந்தனர். மேலும் இருப்பு வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்பதால் இருப்பு வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.30-க்கு விற்பனையானது, ரூ.28.50 ஆக குறைந்துள்ளது என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒரு கிலோ தனியா (மல்லி) ரூ.100 வரை விற்பனையானது. இதனால் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்று ராஜஸ்தான் மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் தனியா பயிர்களை விவசாயிகள் அதிகஅளவில் பயிர்செய்தனர். இதனால் விளைச்சல் அதிகரித்து, கடந்த மாதம் ஒரு கிலோ தனியா ரூ.60-க்கு விற்பனையானது, ரூ.45 ஆக சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் விளைச்சல் நன்றாக இருப்பதால் முதல் ரக குண்டு மிளகாய் வத்தல் கிலோ ரூ.120-க்கு விற்பனையானது, ரூ.90 ஆகவும், இரண்டாவது ரக குண்டு மிளகாய் வத்தல் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது, ரூ.60 ஆகவும், நீள மிளகாய் வத்தல் கிலோ ரூ.75-க்கு விற்பனையானது, ரூ.60 ஆகவும் குறைந்துள்ளது.