சுதந்திர தினம்-நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்புப் படைகள்
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் மாநில அரசுகளும், மத்திய அரசும் இறங்கியுள்ளன.
மத்தியஉள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதில், முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள்,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்துப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் பாதுகாப்புப் படையினர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் படையினரும் அனுப்பப்படவுள்ளனர்.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிரமாண்டமான வணிக தளங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.