கர்நாடக குரலை எதிரொலிக்கும் கருணாநிதி-உழவர் முன்னணி குற்றச்சாட்டு
சிதம்பரம்: கர்நாடகாவில் அணை நிரம்பினால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என கர்நாடக முதலமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியோ கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசியுள்ளார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும் என தமிழக உழவர் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பேசியதாவது,
கர்நாடகாவில் மழை பெய்து அணை நிரம்பினால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று இது வரை இருந்த கர்நாடக முதலமைச்சர்கள் கூறி வந்தனர்.
ஆனால், அண்மையில் கோவையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகின்றது.
இந்த காலத்தில் தமிழக அரசு செய்த கடும் தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியையே அழித்து விட்டது. இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications