நெல்லையில் புதிய மேம்பாலம், பேருந்து நிலையம்: மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்டமான மேம்பாலத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தார். நேற்று அவர் தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம், தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், சுனாமி குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேற்றுமுன்தினம் இரவு நெல்லை வந்த மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் திரளான திமுகவினர் கலந்து கொண்டு வரவேற்றனர். அவர் சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று காலை நெல்லை வண்ணார்பேட்டையில் ரூ.15 கோடியே 78 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் வீரவநல்லூரில் மத்திய மந்திரி நெப்போலியன் கட்டியுள்ள தசை பிடிப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் ரூ.22 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்லிடைக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் திட்டபணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அம்பை தாலுகா அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டவும், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து விக்கிரமசிங்கபுரம் நகரசபை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு கடையநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவடைந்த பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
இந்த விழாவில் செங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், தென்காசி அரசு மருத்துவமனையிலும் புதிய கட்டிடம் மற்றும் விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், செங்கோட்டையில் வாஞ்சி நாதன் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.