கால தாமதமாக வந்த அமைச்சர் விமானத்திற்குள் ஏற அனுமதி மறுப்பு
மும்பை: மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக இருப்பவர் சுபோத் காந்த் சகாய். அவர் கடந்த 26-ம் தேதி மும்பையில் இருந்து ராஞ்சிக்கு செல்ல காலதாமதமாக வந்ததால் ஏர் இந்தியா அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர் தான் யார் என்று தெரியுமா, தன்னை அனுமதிக்காவிடில் விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேலிடம் தெரிவிக்கப்போகிறேன் என்று மிரட்டியும் அதிகாரிகள் மசியவில்லை. அவர் பாட்சா பலிக்கவில்லை.
இந்த நாடகம் காலை 8 மணி அளவில் தொடங்கியது. சகாய் டெல்லி வழியாக ராஞ்சிக்கு செல்லும் ஐ.சி. 809 விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமானம் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வந்துள்ளார்.
ஆனால் செக் இன் நேரம் முடிந்து விட்டதாக கூறி ஏர் இந்தியா அதிகாரிகள், சகாயை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டனர்.
இந்த சர்ச்சை குறித்து சகாய் கூறுகையில்,
என்னை அதிகாரிகள் விமானத்திற்குள் அனுமதிக்கவில்லை. அதற்காக நான் யாரையும் மிரட்டவில்லை. விமானப் பாதை மாற்றத்தால்தான் நான் விமானம் புறப்பட்டு செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் வந்தேன். விமானப் பணியாளர் ஒருவர் தான் விமானம் சர்வதேச டர்மினலுக்கு அருகில் நிற்கிறது என்றார்.
மேலும், நான் அங்கு செல்ல 20 நிமிடங்கள் ஆகும் என்று கூறினார். இது பற்றி என்னிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தால் நான் சரியான நேரத்திற்கு வந்திருப்பேன். நான் தினமும் பயணம் செய்பவன். நான் என்றைக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications