இரு சரக்குக் கப்பல்கள் மோதல்-மும்பை கடலில் எண்ணெய்க் கசிவு அபாயம்
மும்பை: மும்பை அருகே 2 சரக்குக்கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் கடலோரக் காவல் படையினர் இறங்கியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து கிளம்பிய எம்எஸ்சி சித்ரா என்ற சரக்குக் கப்பலும், எம்வி கலீஜியா-3 என்ற சரக்குக் கப்பலும் மும்பை துறைமுகத்திலிருந்து 5 கடல் மைல் தொலைவில் மோதிக் கொண்டன.
இதில் சித்ரா கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இருந்த 33 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மூழ்கி வரும் சித்ரா கப்பலிலில் 2662 டன் எரிபொருள் உள்ளது. இதுதவிர 283 டன் டீசலும், 88 டன் லூப்ரிகன்ட் எண்ணெயும் உள்ளன.
மூழ்கி வரும் கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் கலக்க ஆரம்பித்தால் பெரும் பிரச்சினையாகி விடும் என்பதால் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 6 கடலோரக் காவல் படை படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விரைவில் சித்ரா கப்பல் முழுமையாக கடலில் மூழ்கி விடும். அதற்குள் அதில் உள்ள எரிபொருட்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கப்பலில் இருந்த 200 கன்டெய்னர்கள் கடலில் விழுந்து விட்டன. அவற்றை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 15 டன் லூப்ரிகன்ட் எண்ணெய் கடலில் கொட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications