திருப்பதி மலையில் பக்தர்களை பீதிக்குள்ளாக்கிய சிறுத்தை பிடிபட்டது
திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில் 2 சிறுமிகளை கடித்து பக்தர்களை பெரும் பீதியாக்கிய சிறுத்தை ஒரு வழியாக பிடிபட்டு விட்டது.
திருப்பதி மலையில் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி இரவு கோகிலா என்ற 3 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றது. இதைப் பார்த்து பதறிப் போன கோகிலாவின் தந்தை, மிகவும் துணிச்சலுடன் தனது குழந்தையை சிறுத்தையிடம் பறித்தார்.
மனித ரத்தத்தை பார்த்து விட்டதால் அந்த சிறுத்தை மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் மலைப் பாதையில், பக்தர்கள் இரவு நேரங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டது. மேலும் சிறுத்தையைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அதே மலைப்பாதையில் உறவினர்களுடன் கோவிலுக்கு நடந்து சென்ற அனந்தபுரம் மாவட்டம் பெந்தலகாடு பகுதியைச் சேர்ந்த சிறுமி கல்யாணி (6) என்ற சிறுமியும் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தாள்.
இதனால் பீதி அதிகரித்தது. இதனால் கடந்த 1-ந் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
சிறுத்தையைப் பிடிக்க மலையின் 31, 35, 36, 41-வது வளைவு பகுதிகளிலும் மற்றும் காளி கோபுரம் அருகேயும் வன இலாகாவினர் இரும்பு கூண்டுகளை வைத்தனர். இந்த 5 கூண்டுகளிலும் சிறுத்தைக்கு உணவாக நாய்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
இதற்குப் பலன் கிடைத்தது. நடைபாதையின் 36-வது வளைவில் வைக்கப்பட்டு இருந்த 1-வது எண் கூண்டில் பெண் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கி இருந்ததை, நேற்று காலை அதிகாரிகள் பார்த்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தை, கூண்டை உடைக்க முயன்று முட்டி மோதியதில் அதன் முகம், உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,
பிடிபட்டு இருப்பது, 7 வயதுள்ள பெண் சிறுத்தை ஆகும். லேசான காயம் அடைந்திருக்கும் இந்த சிறுத்தைக்கு, அலிபிரி அருகே உள்ள வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, இன்னும் நில நாட்களில் இந்த சிறுத்தை காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடப்படும். அருகில் விட்டால் மீண்டும் திருப்பதிக்கு திரும்பி வந்து தாக்கக் கூடும் என்பதால், திருப்பதியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, கர்நூல் மாவட்டம் நல்லமலை வனப்பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பதி மலையில் மேலும் சில சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு தொடர்ந்து கூண்டுகள் வைக்கப்பட்டு அந்த சிறுத்தைகளும் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.