மாவோயிஸ்ட் ஆதரவுடன் மமதா பானர்ஜி இன்று லால்கரில் பேரணி
கொல்கத்தா: நக்சலைட்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலம் லால்கரில் இன்று மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் பேரணி நடத்துகிறது. இந்தப் பேரணிக்கு மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மாவோயிஸ்டுகளுடன் மமதா பானர்ஜி கை கோர்த்து செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மமதாவின் லால்கர் பயணத்திற்கும், பேரணிக்கும், கூட்டத்திற்கும் தாங்கள் முழு ஆதரவு தருவதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கிஷன்ஜி கடந்த வாரம்தான் கூறியிருந்தார்.
மேலும் இந்தப் பேரணியின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎப்பை பயன்படுத்த மேற்கு வங்க அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இந்தப் பேரணியை திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரில் நடத்தப் போவதில்லை, சாந்த்ராஸ் பிரோதி மஞ்சா என்ற அமைப்பின் பெயரில் நடத்தப் போவதாக மமதா கூறியுள்ளார். இந்த அமைப்பு பரவலான ஜனநாயகத்திற்கான அமைப்பு என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தப் பேரணியில் மமதா தவிர நக்சலைட் ஆதரவாளர்களான எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, சுவாமி அக்னிவேஷ், மேதா பத்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
லால்கருக்கு மமதா வருவதால் மேற்கு மிதினாப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் மமதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications