For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரம்-10 நாள் நடத்த திமுகவுக்கு கருணாநிதி உத்தரவு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் சாதனைகளை இதில் விளக்கிப் பேசுமாறும், அரசை விமர்சிப்போருக்கு உரிய புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளிக்குமாறும் அவர் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

திமுக அரசு மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் தொடர்ந்து அதிமுக மட்டுமல்லாமல், காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பேச்சாளர்கள் கூட்டத்தின்போது இந்த உத்தரவை கருணாநிதி பிறப்பித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இங்கே உள்ள சொற்பொழிவாளர்கள் எல்லாம் தங்களது சொற்பொழிவால் தமிழக மக்களை தி.மு.க.வுக்கு வலுசேர்க்கிற வகையில் அதிகரிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது; நானும் மறந்துவிடவில்லை.

சொற்பொழிவாளர்கள் தங்களுடைய சிரமங்களை இங்கே எடுத்துச் சொன்னபோது, ஒரு சிலர் கைதட்டியதை நான் காணத் தவறவில்லை. நிர்வாகிகளைக் குறை சொல்லிப் பேசினால் சொற்பொழிவாளர்களுக்கு மகிழ்ச்சி. சில சொற்பொழிவாளர்களைக் குறிப்பிட்டு பேசினால் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி. இந்த நிலை தொடரக் கூடாது.

சொற்பொழிவாளர்களாக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, கட்டுப்பாட்டு உணர்ச்சியோடு தி.மு.க.வை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இருசாராரும் ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு, பகைத்துக் கொள்ளாமல் நடந்துகொள்ள வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா, திமுக தொடக்க விழா இந்த மூன்றும் இணைந்து முப்பெரும் விழா ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தக் கூட்டங்களில், விழாக்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 20 முதல் 30-ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவாக இருந்தாலும், எல்லாமே தி.மு.க.வின் கொள்கை வளர்க்கும் பிரசாரம் தான் என்ற நிலையிலே அதில் பேச்சாளர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும். சொற்பொழிவாளர்களுக்கான பயிலரங்கம் நீலகிரியில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X