பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு-கொல்லம் வந்தது கர்நாடக போலீஸ்-மதானி இன்று கைது?
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் மதானியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் காவல்துறை தனிப்படையை அமைத்தது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் மதானி.
கர்நாடக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து சமீபத்தில் கேரளாவுக்கு கர்நாடக தனிப்படை போலீஸார் வந்தனர். ஆனால் மதானியை அவர்கள் கைது செய்யாமல் திரும்பிப் போய் விட்டனர்.
இந்த நிலையில் இன்று பெங்களூரிலிருந்து டி.எஸ்.பி. சித்தராமையா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வந்து அங்கிருந்து கொல்லம் வந்துள்ளனர்.
இன்று மதானியை அவர்கள் கைது செய்யவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள மதானியின் வீட்டைச் சுற்றிலும் அவரது கட்சியினர் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே வீட்டைச் சுற்றில் காவல் போல இருந்து வருகிறார்கள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிய நேரத்தில் மதானி கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. மதானியைக் கைது செய்ய கர்நாடக போலீஸாருக்கு கேரள போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.