விமானத்தில் இடம் தர மறுப்பு-அமைச்சர் பெரியகருப்பனிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா
சென்னை: தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு விமானத்தில் இடம் தர மறுத்தது தொடர்பான விவகாரத்தில், அவரிடம் ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்ல பெரியகருப்பன் திட்டமிட்டு ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் புக் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி டிக்கெட் புக் செய்தபோது வெயிட் லிஸ்ட் என்று வந்துள்ளது. பின்னர் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த டிக்கெட்டுக்காக பெரியகருப்பன் சார்பில் ரூ. 11,800 கட்டணம் செலுத்தப்பட்டிருந்தது.
பெரியகருப்பனுக்கு இடமில்லை என்று கூறிய ஏர் இந்தியா நிறுவனம், ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவரின் மனைவியான சுலோச்சனா ராமதாஸ் என்பவரை இலவசமாக பயணம் செய்ய அனுமதித்துள்ளது. அவர் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்துள்ளார்.
வழக்கமாக பிசினஸ் கிளாஸில் இடம் இருந்தால், ஊழியர்கள், அதிகாரிகளின் குடும்பத்தினர் அதில் சலுகை அடிப்படையில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதாவது இடம் இருந்தால் மட்டுமே. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட பலரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் சுலோச்சனாவுக்கு மட்டும் எப்படி இடம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்பது தெரியவில்லை.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அமைச்சர் பெரியகருப்பனின் கூடுதல் முதன்மை செயலாளர் ஆர். அண்ணா, கடிதம் மூலம் கொண்டு சென்றார். தனது அதிகாரத்தை சென்னை விமான நிலைய ஏர் இந்தியா நிறுவன பொது மேலாளர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் அவர் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து அண்ணா கூறுகையில், அமைச்சர் பயணிக்கவிருந்த விமானத்தில் இடம் இல்லை என்று கூறிய ஏர் இந்தியா நிறுவனம், அதே விமானத்தில் 3டி என்ற இருக்கை எண்ணில் ஒரு பயணியை இலவசமாக பயணிக்க அனுமதித்துள்ளது. இதுகுறித்து எங்களுக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து இதை ஏர் இந்தியா நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் என்றார்.
அரசு நிறுவனமான ஏர் இந்தியா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தனியார் வி்மானமான கிங்பிஷரில் ஏறி மதுரைக்குச் சென்றார் பெரியகருப்பன்.
இந்த நிலையில் தற்போது அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர்இந்தியா நிறுவனம் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. நடந்த விஷயத்தை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடிதம் எழுதப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications