இந்திய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் தர ஆப்பிரிக்க நாடுகள் ஆர்வம்
பெங்களூர்: தனது நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு இந்திய விவசாயிகளின் உதவியை ஆப்பிரிக்க நாடுகள் நாடுகின்றன. இதற்காக 99 வருட குத்தகைக்கு இலவசமாக நிலங்களைத் தரவும் அவை தயாராக உள்ளனவாம்.
இதுதொடர்பான தகவலை அசோசம் பொதுச் செயலாளர் டி.எஸ். ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றையும் அசோசம் அனுப்பியுள்ளது. அதில், ஆப்பிரிக்காவில் விவசாய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்திய விவசாயிகளை இதில் பயன்படுத்த ஆப்பிரிக்க நாடுகள் பலவும் ஆர்வமாக உள்ளன. இந்தியா இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய விவசாயிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன் மூலம் இந்தியாவுக்கும் பலன் கிடைக்கும். ஆப்பிரிக்காவிலிருந்து தானாக வந்துள்ள இந்த வாய்ப்பை இந்தியா சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
ராவத் தொடர்ந்து கூறுகையில், இலவசமாக நிலங்களைத் தரவும் சில ஆப்பிரிக்க நாடுகள் ஆர்வமாக உள்ளன. 99 வருட குத்தகைக்கு, ஒரு பைசா கூட தராமல் நிலங்களை பயன்படுத்திக்கொள்ள அவை முன்வந்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும் என்றார்.
அங்கு போகும் இந்திய விவசாயிகள் சொந்தமாக எதை வேண்டுமானாலும் பயிரிடலாம். உற்பத்தியாகும் பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்கலாம், விரும்பினால் ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய ஆப்பிரிக்க நாடுகள் தயாராக இருப்பதாக ராவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications