மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக யாரும் பேசக் கூடாது-ப.சிதம்பரம் கண்டிப்பு
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த லால்கரில் நடந்த கூட்டத்தில் நக்சலைட்களுக்கு ஆதரவாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி பேசிய பிரச்சினை இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
அப்போது ப.சிதம்பரம் குறுக்கிட்டுப் பேசுகையில், மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு ஆதரவாக யாரும் பேசக் கூடாது என்பதே அரசின் கருத்து. குறிப்பாக அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் நக்சலைட் ஆதரவு போக்குடன் இருக்கக் கூடாது. நக்சலைட்களை எந்த ரூபத்திலும் ஆதரிக்கக் கூடாது.
அரசின் கொள்கையைத்தான் அரசுப் பதவிகளில் இருப்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். இதில் அரசுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றார் சிதம்பரம்.
மாவோயிஸ்டுகளுக்கு சீனா ஆதரவு தருவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், சீனா மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை.
சீனாவை இதில் குற்றம் சாட்ட எந்த ஆதாரமும் அரசிடம் இல்லை. மேலும், தேச விரோத சக்திகளிடமிருந்து நக்சலைட்கள் ஆயுதங்ளைப் பெறுகிறார்கள் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
அதேசமயம் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு அமைப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி மட்டும் அரசிடம் உள்ளது. தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் போக்கை அரசு கண்காணித்து வருகிறது.
உள்நாட்டிலேயே, கடத்தல், மிரட்டல், கொள்ளை போன்ற செயல்கள் மூலம்தான் நக்சலைட்கள் தங்களுக்குத் தேவையான நிதியை திரட்டி வருகிறார்கள். மேலும், மியான்மர், வங்கதேசம் வழியாக எல்லைப்புறமாக ஆயுதங்களையும் அவர்கள் கடத்திக் கொள்கிறார்கள் என்றார் சிதம்பரம்.