காங்கிரஸ் பெண் பிரமுகரை கொன்ற அக்காள் மகன்கள்!
சென்னை: நிலத்தகராறில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த அவரது அக்காள் மகன்கள் 3 பேரும், மதிமுக இளைஞரணி பிரமுகரும் தலைமறைவாகிவிட்டனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசனின் மனைவி வரலட்சுமி (41). காங்கிரஸ் பிரமுகரான இவர் கந்து வட்டி தொழில் செய்து வந்தார்.
மேலும் அப் பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு பெண் தாதாவாக வலம் வந்தார். நேற்றிரவு வீட்டில் மகள் சாமுண்டீசுவரி மற்றும் நண்பர் பாலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து வரலட்சுமியை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இதைத் தடுத்த பாலுவுக்கும் கையில் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து வரலட்சுமியின் மகள் சாமுண்டீசுவரி கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வரலட்சுமிக்கும் அவரது அக்கா கலாவுக்கும் 2 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது.
இதனால் வரலட்சுமி மீது அவரது அக்காள் மகன்களான சுரேஷ், சுபாஷ், சுகுமாரன் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்தனர்.
மேலும் தாம்பரம் மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர் வேலு பிரபாகரன் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் இடையிலும் நிலம் தொடர்பாக பிரச்சனை உள்ளது.
இந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று வேலு நீதிமன்றம் சென்றபோது அங்கு வந்த வரலட்சுமிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வேலு பிரபாகரன், சுரேஷ், சுபாஷ், சுகுமாரன், மற்றொரு நபர் ஆகியோர் சேர்ந்து வரலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகிவிட்ட இந்த ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.