காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

Kashmir Protest
டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரி பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டங்கள நடத்தி வருகின்றனர்.

தினந்தோறும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஊரடங்கையும் மீறி ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் மத்தியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவிகள் உயிரிழந்துவிட்ட நிலையிலும் போராட்டங்கள் ஓயவில்லை.

இதனால் நிலைமையை ராணுவத்தைக் கொண்டு முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந் நிலையில் இந்த விவகாரம் ஏதோ கிரீன்லாந்தில் நடப்பது போல மத்திய அரசு அமைதி காத்து வந்தது. முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு முழு அதிகாரத்தையும் தந்துவிட்டு, அவரே பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்பது போல அரசு நடந்து கொண்டது.

ஆனால், அவரது கட்சியினரே பொது மக்களுடன் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதால் அவரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதே போல போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு மத்தியப் படைகளுக்கு ஒரு நாள் உத்தரவு தரும் மத்திய அரசு, மறுநாள் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறது. இதனால் படையினர் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் பொது மக்களின் உயிரிழப்புகளை உலக அளவில் பாகிஸ்தான் பிரச்சனையாக்க முயல்வதால், இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் மத்திய அரசு கையைப் பிசைந்து வருகிறது.

அதே போல மத்திய உளவுப் பிரிவினரும் இந்தப் பிரச்சனையை குழப்பியடித்து வருகின்றனர். இவர்கள் தரும் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை.

அரசியல்ரீதியாக அணுக வேண்டிய இந்த விவகாரத்தை ஆயுதங்கள் கொண்டோ அல்லது உளவுப் பிரிவினரின் டெக்னிக்குகளைக் கொண்டோ கையாள்வது மேலும் சிக்கலாக்கும் என்பதை மத்திய அரசு மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். இதை காஷ்மீரின் மிக முக்கிய எதிர்க் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துவிட்டது.

அதே நேரத்தில் காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடந்த இக் கூட்டத்துக்குப் பின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உருது மொழியில் உரையாற்றிய பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிப்பதாக உள்ளது. கலவரத்தில் மகன், மகளை இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதைப் போல உணர்கின்றனர். இதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. அவர்கள் சுய மரியாதையுடன் வாழ முழு உரிமை உண்டு.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காஷ்மீர் இளைஞர்களின் வலி எனக்குப் புரிகிறது. காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தடுத்து தவறுகள் நடந்துவிட்டதை ஒப்புக் கொள்கிறேன்.

மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸாருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை.

இதனால் மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸாரும் மிகப் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். அவர்களில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இனிமேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

காஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர் சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது.

இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், இதற்கு முதலில் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரியானது என்றாலும், அதை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே செய்ய முடியும். நாங்கள் அரசியல் சட்டத்தின் வேலைக்காரர்கள் மட்டும் தான்.

பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்பட முதலில் மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+