தென் சென்னை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தென் சென்னை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவரை ஒரு கும்பல் அரிவாள்களால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தென் சென்னை மாவட்டத் தலைவராக சமீபததில் நியமிக்கப்பட்டவர் செளந்தராஜன் (54).
இவர் சென்னை பெருங்குடி திருமலை அலெக்ஸ் நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியிலேயே இவரது அலுவலகமும் உள்ளது.
நேற்றிரவு தனது அலுவலகத்தில் இருந்த செளந்தர்ராஜனை 6 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள்களால் பயங்கரமாகத் தாக்கியது. இதில் அவரது கை, கால்களில் வெட்டு விழுந்தது.
இதைத் தடுக்க முயன்ற அவரது அலுவலக உதவியாளர் கணேசன் (35) என்பவரையும் அந்தக் கும்பல் வெட்டியது.
இதில் படுகாயமடைந்த இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்.
செளந்தர்ராஜனின் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிய காட்சி அதில் பதிவாகியுள்ளது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து செளந்தர்ராஜனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சமீபத்தில் வணிகர் சங்கப் பேரவை இரண்டாக பிளவுபட்டு இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.