சாமியார்களிடம் மோசடி-சென்னை என்ஜினீயர் கைது
சென்னை: சாமியார்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த என்ஜினீயர் பிரகாஷ் பிரபல ஆசிரமங்களின் சாமியார்களிடம் நிலம், கார்கள் வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி கமிஷனர் தங்கராஜ் விசாரணை நடத்தி பிரகாசை கைது செய்தார்.
இவர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களில் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் கைதான விவரம் அறிந்து பல்வேறு ஆசிரமங்களின் நிர்வாகிகள் சென்னை போலீஸாரை தொடர்பு கொண்டு புகார்களைத் தந்துள்ளனர்.
இவரிடம் சுமார் 100 பேர் வரை ஏமாந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இவர் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து போலி வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி, பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு தலைமறைவான விவரமும் இப்போது வெளியில் வந்துள்ளது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.