சிதம்பரம்: ஆலய நுழைவு போராட்டம்-1,144 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய 1,144 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
நடராஜர் கோவிலுக்குள் தலித் வகுப்பைச் சேர்ந்த சிவ பக்தரான நந்தனார் நுழைந்ததையடுத்து, ஆகம விதிகளைச் சொல்லி, அவர் சென்ற தெற்கு வாசல் வழியை இழுத்து மூடி சுவர் வைத்து கட்டிவிட்டனர் தீட்சிதர்கள்.
இந் நிலையில் அதே தெற்குவாசல் வழியே ஆலய நுழைவு போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்திருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந் நிலையில் தடையை மீறி நடராஜர் கோவில் தெற்குவாசல் வழியாக ஆலயத்திற்குள் நுழைவது என்று அக்கட்சியினர் முடிவு செய்து வடக்கு வீதி உழவர் சந்தை அருகில் ஒன்று கூடினர்.
போராட்டம் மற்றும் ஊர்வலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதில் திருத்துறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், புதுவை சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி உள்பட விவசாய தொழிலாளர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
அவர்கள் வடக்குவீதி உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் வடக்கு வீதி, மேல வீதி வழியாக சென்றது.
போராட்டக்காரர்கள் தெற்கு வீதி பஸ் நிறுத்தம் வழியாக கோவிலுக்குள் நுழைய முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 1,144 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தா.பாண்டியன், முன்பு ஒரு நந்தன் நடராஜர் கோவிலுக்குள் சென்றதை ஆகமங்களை கூறி தடுத்தார்கள். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான நந்தன்கள் கோவிலுக்குள் செல்லப் போகிறார்கள்.
ஆகவே 4,000 ஆண்டுகளாக உள்ள அவமான சின்னமான இந்த தடை சுவரை தமிழக அரசு நிரந்தரமாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் இந்த சுவரை திறக்கும் வரை அடுத்தடுத்து அடுக்கடுக்கான தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.