கைதைத் தவிர்க்க மதானி திணறல்-சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரான அப்துல் நாசர் மதானி இன்றே கைது செய்யப்படக் கூடும் என தெரிகிறது. ஆனால் கைதைத் தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.
கொல்லம் வந்து முகாமிட்டுள்ள கர்நாடக போலீஸ் படையினர் மதானியை இன்று கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப கொல்லம் அன்வர்சேரியில் மதானியின் வீடு உள்ள பகுதியைச் சுற்றிலும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக பெங்களூரிலிருந்து வந்துள்ள தனிப்படையினர் கொல்லத்திலேயே தங்கியுள்ளனர். குடியரசுத் தலைவர் கேரளாவுக்கு வந்துள்ளதால் மதானியைக் கைது செய்வதை தள்ளி வைத்து குடியரசுத் தலைவர் கிளம்பிச் செல்வதற்காக காத்துள்ளனர்.
இந்த நிலையில் கைதைத் தவிர்க்க சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார் மதானி. முன்ஜாமீன் கோரி அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதானி வீட்டைச் சுற்றிலும் குவிந்துள்ள அவரது ஆதரவாளர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போலீஸார் விரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
மைனாகப்பள்ளி, சாஸ்தாகோட்டை பஞ்சாயத்துக்களில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. ஹர்ஷிதா அட்டல்லுரி தலைமையில் போலீஸ் படையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மதானி இன்று இரவுக்குள் கைது செய்யப்படக் கூடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவரைக் கைது செய்வதை யாரேனும் தடுத்தால் அவர்களையும் கைது செய்ய கேரள போலீஸார் தயாராக உள்ளனர்.












Click it and Unblock the Notifications