வைகோ தலைமையில் உதயமாக போகும் தமிழர் கூட்டணி?
அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதக ஆகிய கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டன.
திமுக கூட்டணியை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அதிமுக தரப்பு புதிய வியூகங்களை அமைத்து தங்களது அணிக்கு புதிய கட்சிகளை கொண்டு வரும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
திமுகவும் தனது கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந் நிலையில் ஈழ விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் கட்சிகள் மீது சீறிப் பாயும் தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி தமிழர் கூட்டணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி நடக்கிறது.
இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு ஆதரவு தருமாம். ஒருவேளை திமுகவை காங்கிரஸ் வெட்டிவிட்டுவிட்டு அதிமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டால், அதில் வைகோவின் மதிமுக இருக்க முடியாத நிலைமை உருவாகும்.
அப்படி ஒரு நிலமை உருவாகும் பட்சத்தில் இந்த தமிழர் கூட்டணிக்கு வைகோவே தலைமை தாங்கக்கூடும் என்கிறார்கள்.
காங்கிரசுடன் அதிமுக கைகோர்த்தால் அதிலிருந்து வெளியேறும் இடதுசாரிகளும் இந்தக் கூட்டணியை ஆதரிப்பார்கள், மேலும் பாமகவையும் இழுக்கலாம் என்பது திட்டமாம். இதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
அதே நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடித்தால், இந்தத் தமிழர் கூட்டணி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக களத்தில் இறங்குமாம்.