தமிழீழம் மலர்ந்தே தீரும், தமிழர் சிந்திய ரத்தம் வீண் போகாது-வைகோ
நெல்லை: 1989ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் அவரை சந்திப்பேன். தமிழீழம் மலர்ந்தே தீரும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நெல்லை, பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் என்ற இலங்கைப் போரில் தமிழர்களின் பாதிப்புகள் குறித்த ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இதை வைகோ தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து எனது பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட இங்கே ஓவியர் புகழேந்தி வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆயிரம் மடங்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கை போர் நிகழ்வுகள் குறித்த இந்த ஓவியங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஒளி நாடாக்களாகவும், புத்தகங்களாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் வீடுகள் தோறும் இடம்பெற வேண்டும்.
தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழத்தை உருவாக்க இந்த ஓவியக் கண்காட்சி பயன்படும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. 1989-ல் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் சந்திப்பேன்.
காலம் கடந்தாலும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. இலங்கை அதிபர் ராஜபக்சே தப்ப முடியாது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இங்குள்ள சிங்களவர்களுக்கு என்ன பாதுகாப்பு? இதைத்தான் சீமான் கூறினார். இங்கே கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எந்த அடக்குமுறைக்கு நாங்கள் அடங்க மாட்டோம் என்றார் வைகோ.
நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மறைமுகமான அடக்குமுறை நிகழ்ந்து வருகிறது. இதை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார்.