வேடிக்கை பார்க்கக் கூடாது, திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார். வழக்கம் போல திமுகவை மறைமுகமாகவும், சற்று நேரடியாகவும் வாரிப் பேசினார். கடுமையாகவும் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், என்னுடைய பேச்சு என்பது சர்ச்சையை எழுப்ப வேண்டும். அப்போதுதான் சர்ச்சை விவாதமாகும். விவாதம் தீர்வாகும்.
43 ஆண்டுகளாக தமிழகத்தை காங்கிரஸ் ஆள முடியவில்லை. திராவிட இயக்கங்கள் ஆண்டு கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள்தான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தியே போராட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆட்சிக்கு வருகின்றன.
நாம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கோவையில் அதிமுக ஒரு கூட்டத்தை காட்டியது. பதிலுக்கு திமுகவும் ஒரு கூட்டத்தை காட்டியது. இதைப்பார்த்து அதிமுக மீண்டும் ஒரு கூட்டத்தை காட்டியது.
டென்னிஸ் விளையாட்டு போல அடித்த பந்தை திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறோம். திருப்பி அடிக்கவில்லை. நாமும் திருப்பி அடித்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
திராவிட இயக்கங்களின் பணி சிறப்பாக உள்ளது. நான் அவர்களை குறை சொல்லவில்லை. நாம் ஏன் அவர்களை போல செயல்படக்கூடாது. தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி வைத்து சீட்டு வாங்கிக்கொண்டு, நாம் உழைத்து அவர்களை ஜெயிக்க வைக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதில்லை. நான் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விளம்பரம், அறிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பேசுவதோடு மட்டும் நின்று விடக் கூடாது.
மத்திய அரசின் சாதனைகளை நாம் பேசவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் திராவிட கட்சிகள் பேசி பேர் வாங்கிக் கொண்டிருக்கின்றன. நான் பேசினாலும் தடை போட்டுவிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள 600 புதிய பேருந்துகள் ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்குகிறது. ஆனால் வேறு ஒரு நேரு இந்தப் பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் கார்த்தி.












Click it and Unblock the Notifications