ராணுவத்தில் சேர்ந்தவர்களிடம் போலி மதிப்பெண் சான்றிதழ்:போலி சான்றிதழ் தயாரித்த கும்பலின் தலைவன் கைது
வேலூர்: ராணுவத்தில் சேர போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விநியோகித்து வந்த கும்பலின் தலைவன் வேலூர் அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
எங்கு பார்த்தாலும் போலிச் சான்றதழ் நடமாட்டம். இது ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. ராணுவத்தில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
ராணுவத் தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்களை கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ராணுவ அதிகாரிகள் சோதித்துப் பார்த்தனர். அப்போது அதில் சிலருடைய சான்றிதழ்கள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ராணுவ அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி என்பவர் பிடிபட்டார். 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்தபோது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்து ஏராளமான 10 மற்றும் 12-ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவரிடம் இருந்து 200க்கும் மேற்பட்டோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று, ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மணி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். மணியுடன் சேர்ந்து போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications