தேர்தல் மாநாடு போல ஜெ. பாராட்டு விழாவை நடத்தும் ஜாதி அமைப்புகள்

சட்டசபைத் தேர்தல் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜெயலலிதா தரப்போ படு மும்முரமாக வேலைகளில் இறங்கி விட்டது. கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் படு தீவிரமாக உள்ளார் ஜெயலலிதா.
ஒருபக்கம் மாநாடுகள் போல கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். கண்டன ஆர்ப்பாட்டங்களை மாநாடு போல நடத்துவது அதிமுக மட்டுமே. மறுபக்கம் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளையும், அமைப்புகளையும் இழுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
கடந்த முறை குட்டிக் கட்சிகளை எட்டி உதைத்த ஜெயலலிதா இந்த முறை ஒரு 'குஞ்சு குளுவாண்' கூட மிஞ்சி விடக் கூடாது என்ற வேகத்தில் உள்ளார். எந்த ஜாதிக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, இழுத்து வாருங்கள் அதிமுகவுக்கு என்று அவர் போட்ட உத்தரவை ஏற்று கட்சி நிர்வாகிகள் கிடைக்கிற கட்சிகளையெல்லாம் கூட்டணிக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 20 தொகுதிகள் வரை ஜாதிக் கட்சிகள், குட்டிக் கட்சிகள் இல்லாததால்தான் அதிமுக இழந்தது. அதுவும் கூட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில். இதை மனதில் வைத்தே இந்த முறை நிரம்பி வழியும் அளவுக்கு கூட்டணி இருக்குமாறு கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா.
வருகிற செப்டம்பர் 29ம் தேதி சென்னை அருகே வானகரத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்த வன்னியர் கூட்டமைப்பு திட்டமிட்டு அறிவித்தது.
தற்போது வன்னியர் கூட்டமைப்புடன் இணைந்து மிகப் பெரிய மாநாடு போல இதை நடத்த டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் முன்வந்துள்ளதாம். செலவு முழுவதையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் அது கூறியுள்ளதாம் (ஆனால் அதிமுக தரப்பிலிருந்தே முழு ஸ்பான்சரும் செய்யப்படலாம் என பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது)
இந்த பாராட்டு விழாவில் வன்னியர் கூட்டமைப்பு, மூவேந்தர் முன்னணிக் கழகம் தவிர, இஸ்லாமியக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, தலித் கட்சிகளான புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி, முக்குலத்தோர் கட்சியான பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட ஜாதிக் கட்சிகளும், மேலும் பல ஜாதிய அமைப்புகளும் சேரவுள்ளனவாம்.
இந்த விழா மேடையை அதிமுகவில் இணையும் ஜாதிக் கட்சிகள் எவை என்பதை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாக இதை மாற்றவுள்ளனர்.
இதன் மூலம் இந்த விழா மூ்லம் கூட்டணியின் முதல் பகுதி நிறைவடைந்திருப்பதை ஜெயலலிதா அனைவருக்கும் கோடிட்டுக் காட்டவுள்ளதாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து பெரிய கட்சிகளுடனான கூட்டணி குறித்த பேச்சுக்களை அவர் முடுக்கி விடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதிமுக வட்டாரத்தில் கோவை, திருச்சி கண்டனக் கூட்டங்களுக்கு நிகராக இந்த பாராட்டு விழாவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா என்ன செய்கிறார், எந்த தைரியத்தில் அவர் துணிச்சலாக பேசி வருகிறார் என்பது புரியாமல் எதிர்க்கட்சித் தரப்பு கவலை மற்றும் குழப்பம் கலந்த பார்வையுடன் அவரது மூவ்களை கவனித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications