வியாபாரிகள் போராட்டம் எதிரொலி-சென்னையில் 4 ரவுடிகள் கைது
சென்னை: சென்னை புளியந்தோப்புப் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து நான்கு ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். ரவுடிகளின் தலைவன் போல செயல்பட்டு வரும் பிரபல ரவுடி அப்புவை வலை வீசி தேடி வருகின்றனர்.
புளியந்தோப்பு பகுதியில் கடைகளில் ரவுடிக்கும்பல் மாமூல் கேட்டு மிரட்டி வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ள மாரிமுத்து, கார்த்திகேயன் ஆகியோரை, பிரபல ரவுடியான அப்பு கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.
பணம் கொடுக்க மறுத்த வியாபாரிகளை அப்பு தாக்கியதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த ரவுடியைக் கைது செய்ய கோரி, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து அப்பு மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரது மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் இவர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில் அப்புவின் கூட்டாளிகளான ரவுடிகள் பிரகாஷ், ஜானி, கார்த்திகேயன், நரசிம்மன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பு தலைமறைவாக உள்ளான். அவனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications