வங்கியில் அடகு வைத்த நகைகள் மாயம்: பொதுமக்கள் முற்றுகை
பணகுடி: செட்டிகுளம் பாண்டியன் கிராம வங்கியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதால் அப்பகுதி மக்கள் நேற்று வங்கியை முற்றுகையிட்டனர்.
கூடன்குளம் அருகே செட்டிகுளத்தில் பாண்டியன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் விவசாயம் சார்ந்த நகை கடன் வழங்கப்படுவதால் வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்கு சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 3236 பேர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வங்கியில் வைத்த நகையை திருப்ப சென்றுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் சங்கரகுமார் லாக்கருக்கு சென்றபோது நகைகள் இல்லாததால் திடுக்கிட்டார். அவர் திரும்ப வந்து கம்யூட்டர் பழுதானதால் இன்னும் ஒரு வாரத்தில் நகையைத் தருவதாக கூறி அப்பெண்ணை சமாளித்து அனுப்பி வைத்தார்.
பின்னர் சங்கரகுமார் இது குறித்து உடனடியாக விருதுநகரில் உள்ள மண்டல அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து வந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் இருவர் வங்கியில் நகையை திருப்ப முயன்றனர்.
அப்போதும் மேலாளர் தரப்பில் கம்யூட்டர் பழுது என்று பதில் தரப்பட்டதால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த தகவல் வெளியே கசிந்ததால் கூட்டப்புளி, பெருமணல், இருக்கன்துறை, புதுமனையைச் சேர்ந்த சுமார் 200 பேர் வங்கி முன் திரண்டனர்.
தங்கள் நகைகளைத் திருப்பி தரக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மண்டல மேலாளர் நெடுஞ்செழியன் தணிக்கை பணிகளை கண்காணித்தார். அடகு வைக்கப்பட்ட நகைகளில் 20 பாக்கெட் மட்டுமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என தெரிகிறது. நகை வைத்திருந்த பாக்கெட் காணாமல் போனது எப்படி என்பது குறித்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications