தீப்பொறி ஆறுமுகம் பேசிய கூட்டத்தில் கத்தியுடன் பாய்ந்த அதிமுக நிர்வாகி கைது
சென்னை: திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் தீப்பொறி ஆறுமுகம் அனல் பறக்க பேசிக் கொண்டிருந்தபோது கத்தியுடன் பாய்ந்தார் அதிமுக பிரமுகர். அவரை அனைவரு் வளைத்துப் பிடித்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் தி.மு.க. அரசின் சாதனைகளையும், ஜெயலலிதாவை கண்டித்தும் தி.மு.க. பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், சைதை கா.கிட்டு, தாயகம் கவி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவு 9.30 மணி அளவில் தீப்பொறி ஆறுமுகம் பேசினார்.
அப்போது மேடை அருகில் ஒரு மர்ம நபர் சுற்றி திரிந்தார். திடீரென அவர் தீப்பொறி ஆறுமுகம் பேசும் போது இடையில் புகுந்து தகராறில் ஈடுபட்டார்.
தரக்குறைவாக பேசியபடியே மேடை ஏற முயன்றார். உடனே அங்கிருந்த தி.மு.க.வினர் அவரை பிடித்து அடித்து உதைத்தனர்.
அப்போது அவரது இடுப்பில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து கிண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், அவரது பெயர் சேகர் (50), ஈக்காட்டு தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர், 140 வது வட்ட ஜெயலலிதா பேரவை அவைத்தலைவராக உள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து திமுக வட்ட துணைச் செயலாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.