சென்னையில் விடிய விடிய கன மழை-நகரே வெள்ளக்காடு
சென்னையி்ல் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், மாலையில் லேசான மழையுமாக இருந்தது. நேற்றும் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. பின்னர் நின்ற மழை நள்ளிரவுக்கு மேல் மீண்டும் தொடங்கியது.
குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காலையிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரண்மாக காலை நேரத்தில் பள்ளிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சில பள்ளிகளில் முதல் மற்றும் 2ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் புறநகர்ச் சாலைகள் (இவற்றை சாலை என்று கூற முடியாது, சாலை போல என்று வேண்டுமானால் கூறலாம்) சேறும் சகதியுமாக மாறியுள்ளன.
கன மழையால் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இன்று அங்கு நடப்பதாக இருந்த எஸ்.ஐ. பணிக்காக உடல் திறன் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
மழை குறைந்தால் இந்தத் தேர்வு மாலை அல்லது நாளை நடக்கும் என்று அறிவி்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு வந்த 500 பேர் ஏமாற்றமடைந்தனர்.
வியாசர்பாடி, கன்னிகாபுரம் ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னி மில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. பேசின் பிரிஜ் பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடப்பதால் அங்கும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரிசர்வ் பாங்கி சுரங்கப் பாதையிலும் தண்ணீர் தேங்கிவிட்டது.
ஜெமினி பாலம் சர்வீஸ் ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மடிப்பாக்கம் மெயின் ரோட்டை அகலப்படுத்த தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பல கார்கள் சிக்கிக் கொண்டன.
கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு சிக்னல், நூறு அடி ரோடு ஆகியவற்றிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீயும், செம்பரம்பாக்கத்தில் 6.8 செ.மீயும், பூண்டியில் 5 செ.மீயும், சோழவரத்தில் 4.5 செ.மீயும், செங்குன்றத்தில் 4.2 செ.மீயும், மீனம்பாக்கத்தில் 4 செ.மீயும் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழாவரம், ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை:
இதேபோல திருவள்ளூரிலும் நேற்று இரவு முதல் கனளமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கூறுகையில், மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
24 மணி நேரம் மழை தொடரும்:
இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் 7 செ.மீ. விழுப்புரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் 24 மணி நேரம் இதே நிலை நீடிக்கும். இரவு நேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.