ராமர் கோவில்-பாஜக தயவில் நாங்கள் இல்லை: விஎச்பி
பெங்களூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கிராம, தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
இது தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாங்கள் தொடங்கியுள்ள அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கம் தேசிய அளவில் நடைபெறும். இதன் மூலம் இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்
இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறார்கள். அயோத்தியில் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை.
பேச்சுவார்த்தை மூலமோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து ராமர் கோவில் கட்டுவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
வன்முறை, தீவிரவாதத்தில் ஈடுபடும் மதானி அமைதியை சீர்குலைப்பவர் என்றார்.
அயோத்தி வழக்கில் 23 பேர் மீது குற்றப் பத்திரிகை:
இந் நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் 23 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் ஆச்சார்ய தர்மேந்திர தேவ், சமாஜ்வாதி எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பாஜக எம்எல்ஏ லாலு சிங், பைசாபாதின் அப்போதைய ஆட்சியர் ஆர்.என்.ஸ்ரீவத்ஸவா உள்ளிட்டோர் மீது நேற்று இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.