வரிகளைக் குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த்
சென்னை:பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகபட்ச வரி விதிக்கலாமா?. அண்மையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசால் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
ஏற்கனவே, விலைவாசி உயர்வாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வாலும் அவதிப்படும் மக்கள் மீது மின் கட்டண உயர்வையும் சுமத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
அதேபோல இதர மாநிலங்களில் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?.
பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22-8-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வாடகை வண்டிகள் நிறுத்தும் இடம் அருகில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.திருப்பதி தலைமையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications