அரசு நிறுவனங்களில் மெடிக்ளெய்ம் எடுத்திருந்தால் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம்
டெல்லி: அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், அவர்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 449 மருத்துவமனைகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிற நோயாளிகளிடம் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே காப்பீடு செய்துள்ளவர்களிடமும் வசூலிக்க,சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள முக்கிய மருத்துவமனை நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்களிடம் அதிகப்படியான சிகிச்சை கட்டணம் வசூல் செய்து வந்தன. இதனால் அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ. 2000 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே இந்த காப்பீடு நிறுவனங்கள் சிகிச்சை கட்டணங்களை வரைமுறை செய்துள்ளன. மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் திவாலாகிவிடும்.
இன்சூரன்ஸ் செய்யாதவர்களுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 55 ஆயிரம் சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளவர்களிடம் ரூ. 1.45 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதிக கட்டண வசூலை அடுத்து அரசுத் துறை காப்பீடு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இண்டியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா அசூரன்ஸ் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தா சிகிச்சை வசதியை கடந்த மாதம் ரத்து செய்தன.
இதை தொடர்ந்து மருத்துவமனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது 449 மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் பல மருத்துவமனைகளுக்கு நீட்டிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications